|
|
Subject :பரலோகமும் பாதாளமும் - புத்தக விமரிசனம்
நரகத்தைப் பற்றிய வெளிப்பாடுகளைப் பெற்றதாக அவ்வப்போது சிலர் எழும்பி உலகத்தை எச்சரிப்பது உண்டு. சில வருடங்களுக்கு முன்பு ஏழு வாலிபர் கூடி ஜெபித்துக் கொண்டிருந்த போது திடீரென பாதாளத்துக்கும் பரலோகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டதாக சாட்சி கூறினர். இது வீடியோவாகவும், புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது. சமீபத்தில் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். படித்தேன்.
“பரலோகமும் பாதாளமும்” புத்தகம் குறித்த எனது கருத்துக்கள்:
இப்புத்தகத்தில் ஏழு வாலிபர் ஒருவர் பின் ஒருவராக தாங்கள் பெற்ற பாதாள பரலோக அனுபவத்தைக் கூறுகின்றனர். அவர்கள் பெற்ற அனுபவம் உண்மையோ பொய்யோ அறியேன். ஆனால் அவர்கள் புத்தகத்தில் சொல்லியிருக்கிற வார்த்தைகள் உண்மைகளா என்பதை வேதத்தின் துணை கொண்டு நாம் எளிதில் அறியலாம்.
முதலாவதாக “பரலோகமும் பாதாளமும்” என்பது புத்தக தலைப்பாக இருந்தாலும் பாதாளம், நரகம் குறித்த காரியங்களே அதிகம் உள்ளன. பாதாளம் குறித்து 49 பக்கங்களும் பரலோகம் குறித்து 30 பக்கங்களும் உள்ளன. இப்புத்தகத்தில் காணப்படும் சில வாசகங்கள் வேதாகமத்திற்கு ஒவ்வாததாக உள்ளன. சிலவற்றைக் கூறுகிறேன்.
நரகம் அல்லது பாதாளம் யாருக்கு?
அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளிப்படுத்தல் 20 :10,15)
உத்தரிக்கும் ஸ்தலமும், நரகத்தின் சுற்றுப்புறப்பகுதியும் இல்லை என்று அறுதியிட்டுக் கூறும் இப்புத்தகம், நரகத்தின் ஆட்சி சாத்தானும் அவனைச் சேர்ந்த பிசாசும் செய்வதாகக் கூறுகிறது. பிசாசு அங்கே வாதிக்கப்படுவான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் இப்புத்தகத்தில் இவர்கள் பாதாளம் சென்ற போது அங்கே வேதனைப்பட்டுக் கொண்டிருந்த ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையைச் சரிவரச் செய்யாமல் இருந்ததால் பிசாசு வந்து அவரை துன்புறுத்தியதாக உள்ளது நம்ம்பும்படி இல்லை. நரகத்தில் பிசாசுகளும் வேதனைப்பட்டுக்கொண்டுதான் இருக்குமே ஒழிய அங்கே அவை மற்றவர்களை துன்புறுத்திக் கொண்டிருக்கும் என்பது கிறிஸ்தவ கருத்து அல்ல.
எப்போது நியாயத்தீர்ப்பு?
நியாயத்தீர்ப்பு அடைந்த பின்னரே ஒரு வர் பாதாளம் செல்வாரா அல்லது பரலோகம் போவாரா என்பதை சொல்ல முடியும்? நியாயத்தீர்ப்பு இன்னும் நடைபெறாத பட்சத்தில், நரகத்தில் எப்படி ஆட்கள்? நியாயத்தீர்ப்பு நடைபெற வேதாகமத்தின் படி இன்னும் பல காரியங்கள் நடைபெற வேண்டியிருக்கிறது. சபை எடுத்துக்கொள்ளப்பட்வேண்டும், அந்திக் கிறிஸ்து வெளிப்பட வேண்டும், அதன் பின்பு இயேசுவின் பகீரங்க இரண்டாவது வருகை நடைபெறவேண்டும் இன்னும் எத்தனையோ ”வேண்டும்” கள் நடைபெற வேண்டும். இவை எல்லாம் நடந்த பின் கடைசியாகத்தான் நியாயத்தீர்ப்பு. பின்பு எப்படி “ நான் நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று” என்று ஒரு வர் கூற முடியும்.
இயேசு ஐசுவரியவான் லாசரு உவமையைக் கூறவில்லையா? அதில் பாதாளம் வருகிறதே என்று சிலர் எதிர் வினை யாற்றக் கூடும். இயேசு சொன்னது ஒரு உவமை மாத்திரமே. இரு காரியத்தை விளங்கச் செய்வதற்காக கூறப்பட்ட ஒரு எடுத்துக்காட்டு. அதை வைத்து இம்மாதிரி கதைகளை உண்மை என்று நம்பச் சொல்லக் கூடாது.
கடைசியாக நான் கூற விரும்புவது, யாரையும் நாம் நரகத்தைக் குறித்துக் கூறி பயமுறுத்தி திருத்த முடியாது, அப்படி செய்யவும் கூடாது. நாம் தேவனுடைய அன்பைக் குறித்து சொல்லி மாத்திரமே ஒருவரை மறுவாழ்வுக்கு ஆயத்தப்படுத்த வேண்டும். பரலோகத்தைக் குறித்துக் கூற எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. அவைகளைப் பற்றி எழுதினால் எவ்வளவு சிறப்பாயிருந்திருக்கும். ஆகவே யாராகிலும் இந்தப் புத்தகத்தைப் பார்த்தால் கண்டிப்பாக வாங்கி விடாதீர்கள். ஒருவேளை கையில் கிடைத்தாலும் படித்து உங்கள் நேரத்தை வீணாக்கிவிட வேண்டாம். இது எனது தாழ்மையான கருத்து. |
IP Logged
|